நெல்லை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், ரயில் நிலையங்கள் மீண்டும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வருகின்றன. இன்று முதல் அறிமுகம் செய்யப்படும் ஊரடங்கு தளர்வில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட உள்ளது. தென்மாவட்டங்களில் 90 சதவீதம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டன. நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து சென்னை, திருச்சி, மும்பை, கொல்லம், பெங்களூரு உள்ளிட்ட ரயில்களில் நல்ல கூட்டம் காணப்படுகிறது. கோவை செல்லும் ரயில்களில் மட்டுமே கூட்டம் சற்று குறைவாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கு முன்பு வரை காலியான இருக்கைகளோடு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது நிரம்பி வழிகின்றன.சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டி காணப்படுகிறது. முதல்நாள் பதிவு செய்து செல்லும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு தினமும் 50க்கும் மேற்பட்டோர் முன்பதிவு கவுன்டர்களில் வரிசையில் நிற்கின்றனர். ரயில் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் முன்பு போல் அதிக கூட்டத்தை தற்போது காண முடிகிறது. நாகர்கோவில் - தாம்பரம், நெல்லை வழியாக செல்லும் ஓரிரு வாராந்திர ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படாமல் உள்ளன. அந்த ரயில்களும் இயக்கப்பட்டால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகம் வர வாய்ப்புள்ளது. அந்தியோதயா ரயில் இயக்கப்படுமா?நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் இன்னமும் இயக்கப்படாமல் உள்ளது. குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு செல்லும் இந்த ரயிலால் நடுத்தர மக்கள் அதிகம் பயன் அடைந்தனர். ஊரடங்கு தளர்வில் பல ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.