நாகர்கோவில்: குமரியில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சளி பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையான டெல்டா வைரஸ் அரசின் தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கட்டுபடுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிவேகமாக பரவக்கூடிய 32 வகையான உருமாற்றங்களை எடுக்கும் ஒமிக்ரான் வைரஸ் தன்மையின் முழு விபரம் பற்றி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை உலக சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர். டிசம்பர் இறுதியில் தான் ஒமிக்ரான் வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் பற்றி முழுமையாக தெரிய வரும் என்றாலும், உலக நாடுகள் இப்போதே அதனை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாட்டின் விமான நிலையங்களில் பாதிப்பு உடைய நாடுகளுக்கு தடை போட்டு விட்டன. இந்தியாவில் இதுவரை தடை விதிக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சளி பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி போடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது. இந்நிலையில், நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் இதுபற்றி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்நிலையில், குமரியில் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில், முககவசம் அனைவரும் அணிவதை உறுதிபடுத்தவும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும், வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம், தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இருப்பதை சரிபார்க்கவும், தடுப்பூசி போட்டிருக்காவிட்டால் அவர்கள் சளி பரிசோதனை செய்து ஒரு வாரத்திற்குள் வந்த ரிசல்ட் இருக்கிறதா என்பதனை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு ஆவணங்களும் இல்லாவிட்டால், அவர்களுக்கு சளி பரிசோதனை செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுபோல், குமரியில் தினசரி வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து பயிலும், மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.கிருமிநாசினி தெளிப்புகணேசபுரம் காவலர் குடியிருப்பில், குழந்தைகள் அதிகம் உள்ளதால், ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அங்கு காலை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டிஎஸ்பி குடும்பத்திற்குபரிசோதனை நாகர்கோவில் நகர டிஎஸ்பிக்கு கொரோனா உறுதி எசய்யப்பட்டதை அடுத்து, அவரின் குழந்தைகள் உள்பட அவரது தொடர்பில் இருந்த 30 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று அவர்களின் பரிசோதனை அறிக்கை அடிப்படையில்அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என மாநகர் நல அலுவலர் விஜய் சந்திரன் கூறினார்.