ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், சேமிப்பு பெட்டகத்தில் இருந்து குழாய் மூலம் மருத்துவமனை வார்டுகள், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் தற்போது மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழாய் சேதமடைந்து ஆக்சிஜன் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆக்சிஜன் செல்லும் வால்வை சரி செய்து ஆக்சிஜன் வெளியேறுவதை நிறுத்தினர். இதன்பின் சேதமான பகுதியை வெல்டிங் வைத்து சரி செய்தனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறலால் ஒரு மணி நேரம் அவதியடைந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் டாக்டர்கள் நிலைமையை சரி செய்தனர்.