கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக இதமான தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் அதிகளவில் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளைப்பூண்டு, காரட், உருளைக்கிழங்கு, கோஸ் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என கொடைக்கானல் மேல்மலை பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் நிலவிவந்த குளிர் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கொடைக்கானலில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால், தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதமான தட்பவெப்பம் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.