மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு பார்வை குறைபாடு உள்ளது. அதற்கு தாய்லாந்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து கூட மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலம் அபகரிப்பு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதில் திமுக பிரமுகர்கள் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.