சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்து வந்த நிலையில், கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாகி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. நேற்று மாலை 6 மணி அளவில் அந்த புயல் மேற்குவங்கத்தில் கரையை கடந்தது. அங்கு பலத்த சேதமும் ஏற்பட்டது. புயல் வலுப்பெற்றபோது வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிவிட்டதால், தமிழகத்தில் வறண்ட வானிலை ஏற்பட்டு, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வெப்பச் சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்தது. அதனால் அந்த மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இந்நிலை 30ம் தேதி வரை நீடிக்கும். வட தமிழகத்தில் இன்று தரைக்காற்று ஒரு சில நேரங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.