சென்னை: தமிழகத்தில் நேற்று 8,633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று 19,860 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோன்று, சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது 500க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் கோவை 1,089 பேர், ஈரோடு 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 35 மாவட்டங்களில் 500க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 19,860 பேர் குணமடைந்தனர். இதுவரை 22,86,653 பேர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு நலம்பெற்று வீடுதிரும்பியுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,70,269 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8,633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 4,882 பேர் ஆண்கள், பெண்கள் 3,751. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19,860 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 22,86,653 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89,009 ஆக உள்ளது. அதன்படி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 287 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 145 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 142 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை மொத்தம் 30,835 பேர் உயிரிழந்துள்ளனர்.