தருமபுரி : தருமபுரி ரத்த வங்கியை முறையாக பராமரிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ரத்த மாற்று சிகிச்சை செய்து கொண்ட சுமார் 12 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. ரத்த வங்கியில் முறையான பராமரிப்பு இல்லை என்றும், ரத்த வங்கியில் பெறப்பட்ட ரத்தத்தை முறையான வெப்பநிலையில் பராமரிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் கடந்த ஜன., வல்லுநர் குழு தருமபுரி மருத்துவக்கல்லூரியில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து 5க்கும் மேற்பட்ட வல்லுநர் குழு தருமபுரி மருத்துவக்கல்லூரியில் உள்ள ரத்த வங்கியில் ஆய்வு செய்து வந்த நிலையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு பணியாற்றக்கூடிய 12 ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ரத்த வங்கியில் பெறப்படும் ரத்தம் முறையாக சோதனை நடத்திய பிறகு தான் நோயாளிக்கு செலுத்த வேண்டும். ஏற்கனவே ரத்த மாற்று சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்திய சம்பவர் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ரத்த வங்கிகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையில் அனைத்து நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ரத்த வங்கியை முறையாக பராமரிக்காமல் சுமார் 12 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரத்த வங்கியில் உள்ள அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று. 6 செவிலியர்கள் மற்றும் ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட ரத்த வங்கி ஊழியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், தற்காலிக பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.