திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 7-ம் கட்டமாக சிலைகள் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கப்பட்டது.திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் 7-ம் கட்டமாக நடத்தப்பட்டு வரும் ஆய்வு பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிலைகளை தொல்லியல் துறை, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பகத்தில் உள்ள 4,539 சிலைகளில் 4,304 சிலைகளின் தென்மைத்தன்மை பற்றி தற்போது வரை ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்த கோயில் சிலைகள் கடத்தல் குறித்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் முதல் கட்ட சோதனையும், நவம்பர் மாதம் 1ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை 2ம் கட்ட சோதனையும் நடத்தினர். இதில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த கோயில்களின் 513 சிலைகள் சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் மூலம் ஜ.ஜி.பொன்மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து 3-ம் கட்ட சோதனை கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது.மீண்டும் 4-ம் கட்ட சோதனை கடந்த மார்ச் 5-ம் தேதி துவங்கி 8-ம்தேதி வரை நடந்தது. 4 கட்டத்திலும் மொத்தம் 2,493 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 5 சிலைகளின் உண்மை தன்மை மாறியுள்ளது தெரியவந்துள்ளதாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மார்ச் 19 துவங்கி நடைபெற்ற 5ம் மற்றும் கட்ட ஆய்வில் தொல்லியல் துறை சார்பாக தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்ட அலுவலர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் 15க்கும் மேற்பட்ட போலீசாரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர் ஏற்கனவே நடந்த ஆய்வுகளில் 5 சிலைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 7-ம் கட்டமாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.