மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையில், மேட்டூர் அருகே மாதேஸ்வரன் சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்ட பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அமாவாசை, யுகாதி, தீபாவளி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டில் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் சுவாமி தரிசனத்திற்கு தமிழக பக்தர்கள் ஏராளமானோர் செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாதேஸ்வரன் மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என சாம்ராஜ் நகர் கலெக்டர் ரவி, ஆலய செயலாளர் ஜெயவிபவசுவாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், 4 நாட்களும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் சம்பிரதாயப்படி நடக்கிறது. 101 கன்னிப்பெண்கள், 10 கிமீ தொலைவு பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம் நடைபெறும் என்றும், பெரிய தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக பக்தர்கள் தடைசெய்யப்பட்ட நாட்களில் கோயிலுக்கு வர வேண்டாம் என நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.