A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை

News

புதுக்கோட்டை : மக்காச்சோளப் பயிரினைத் தாக்கும் படைப்புழுவினை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட வேண்டுமென வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தாக்குதலின் அறிகுறிகள்:தாய் அந்துப்பூச்சியானது முட்டை குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியினை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாக காணப்படும. இரவு நேரங்களில் அதிக சேதத்தை விளைவிக்கக் கூடியது. மூன்றாம் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரையிலான புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் நிலையில் வரிசையாகத் துளைகள் காணப்படும். மேலும், வளர்ந்த புழுக்கள் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும்.ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புஒரு ஏக்கருக்கு ஒரு எண் விளக்குப் பொறி அல்லது 4 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறி வைத்துக் கட்டுப்படுத்தலாம்.இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகத் தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களை வரப்புப் பயிராகப் பயிரிட வேண்டும். வரப்புப் பயிராகக் கம்பு நேப்பியர் புல்லை விதைப்பதற்கு முன்னதாக வரப்புப் பயிராக நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம். கோடை உழவு செய்து மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். ஒரு கிலோ கிராம் விதைக்கு நுண்ணுயிர்ப் பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா அல்லது தையோமீத்தாக்சம் மருந்தினை 10 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மக்காச்சோளத்திற்குப் பிறகு மீண்டும் மக்காச்சோளம் பயிரிடுவதைத் தவிர்த்து பிற பயிர்களான பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிட்டுப் பயிர் சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோள பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து மக்காச்சோளப் படைப்புழுவினைக் கட்டுப்படுத்திடலாம் எனவும், மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

756 Days ago