திருப்பூர் : திருப்பூரில் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் ஏராளமான பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் டவுன்ஹால் உள்பட ஏராளமான இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளின் காரணமாக மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்கிறவர்களுக்கு வசதியாக கோவில்வழியில் பஸ் நிலையமும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தேர்தல் அறிவிப்பு நெருங்கிய நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகள் முழுவதும் சாலை, குடிநீர் பணிகள் திட்டமிடப்படாமல் அவசரகதியில் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைகிறார்கள்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருப்பூர் மங்கலம் ரோடு, 60 அடி ரோடு, தாராபுரம் ரோடு, அவினாசி ரோடு என மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் அவசரகதியாக சாலை பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி என ஏராளமான பணிகள் நடந்து வருகிறது.திருப்பூர், புதிய பஸ் நிலையம்,பாண்டியன் நகர், பெருமாநல்லூர்உள்ளிட்ட பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பனியன் நிறுவன தொழிலாளர்களை அழைத்து செல்லவும், கோவை, பழையபஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பஸ்கள்60 அடி ரோட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ரோடு முழுவதும் மந்தகதியில் பணிகள் செய்யப்பட்டு வருவதால், காலை மற்றும் மாலை வேலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஆம்புலன்ஸ் கூட விைரந்து செல்ல முடிவதில்லை. எனவே இந்த பணிகளை திட்டமிட்டும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமலும் செய்ய வேண்டும், என்றனர்.