பொன்னேரி: மீஞ்சூர், திருவெள்ளைவாயல் கிராமத்தில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை செங்கழுநீர்மேடு, ஊரணம்பேடு உள்பட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில்களில் எந்த விசேஷங்களும் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த தளர்வில்லா முழு ஊரடங்கையும் மீறி நேற்று முன்தினம் துலுக்காணத்தம்மன் கோயிலில் ஆடி மாத 5வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தீமிதி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தீமிதி திருவிழாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் கலந்து கொண்டனர். இதனால் அங்கு கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.