கம்பம் : வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சம் பழங்களின் பயன்பாடு அதிகரித்து, கம்பம் பகுதியில் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குளிர்பானங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதனால், சர்பத்களில் சேர்க்கவும், ஜூஸ் தயாரிக்கவும் எலுமிச்சம் பழங்களை அதிகளவில் பயன்படுத்து வருகின்றனர். கடந்த சில மாதமாக மழை இல்லாததால், எலுமிச்சை வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வீட்டுக்கு வீடு குளிர்பானம் தயாரிப்பதாலும் எலுமிச்சையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் எலுமிச்சை பழத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், எலுமிச்சம் பழத்தை பிஞ்சிலே பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதி கடைகளில் எலுமிச்சையின் விலை ஆப்பிள் விலையை தொட்டுள்ளது. தற்போது இங்குள்ள கடைகளில் கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து எலுமிச்சை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘கோடைகாலம், வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து கிலோ 80 ரூபாய் வரை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலையில் தருகின்றனர். நாங்கள் அதை செலவு செய்து கொண்டு வந்து 130, 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் விட அதிக லாபம் பெறுவது இடைத்தரகர்கள் மட்டுமே’ என்றார். எலுமிச்சம் பழம் சந்தைதிண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மற்றும் தாண்டிக்குடி, தேனி மாவட்டம், போடி பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. நஞ்சு முறிப்பு மருந்துஇந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய நாடுகளில் எலுமிச்சை முதலில் தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. புளிப்புச்சுவை கொண்ட இப்பழத்தின் சாறு தற்போது பல்வேறு பானங்கள் தயாரிக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது.